சர்வ மங்கள ஸ்வரூபியானவனும், மங்கலத்தினை அருளுபவனுமான சிவபெருமானுக்கு மிகவும் உகந்த இரவு எதுவென்றால், அது மஹா சிவராத்திரிதான்.
சிவராத்திரி ஐந்து வகைப் படும். அவை,
நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி மற்றும் மஹா சிவராத்திரி .
சிவன் லிங்கோத்பவராகக் காட்சி கொடுத்தது மஹாசிவராத்திரி அன்றுதான்.
ஆலகால விஷத்தினை அள்ளிப் பருகியது, ஒரு சதுர்த்தசி திதியினில்தான்.
அதனால்தான் மாசி மாதத்தில் வரும்,தேய்பிறை சதுர்த்தசி திதியில், இந்த வைபவம் கொண்டாடப்படுகிறது.
அன்று மகேசனை, லிங்க ரூபத்தினில் வழிபடுவதற்கு முன், இடது பாதம் தூக்கி ஆடும் நடராஜ ஸ்வரூபத்தினை தியானம் செய்ய வேண்டும்.
நடராஜப் பெருமானின், திருவடி , ‘நகாரம்’ எனவும்,திருவுந்தி , ‘மகாரம்’ எனவும், திருத்தோள் , ‘சிகாரம்’ எனவும் , திருமுகம் , ‘வகாரம்’ , எனவும், திருமுடி , ‘யகாரம்’ எனவும் போற்றப்படுகிறது.
பகவானை தரிசனம் செய்யும் பொழுது, பாதத்தில் தொடங்கி, சிரசில் முடிக்க வேண்டும்.
‘சிவே பக்தி ,சிவே பக்தி ,சிவே பக்திர் பவே பவே
அந்யத சரணம் நாஸ்தி , த்வ மேவ சரணம் மம’
பிறவிகள் தோறும் எனக்கு சிவபெருமானிடம் பக்தி வேண்டும். எனக்கு வேறு எதுவும் ரட்சணம் தேவை இல்லை என்று இந்த ஸ்லோகம் கூறுகிறது.
சிவராத்திரி அன்று, உபவாசமிருந்து, பஞ்சாட்சர மந்திரமான ‘ஓம் நமசிவாய’ என்னும் நாமத்தினை தியானம் , செய்து இரவு, கோயிலுக்குச் சென்று நான்கு கால பூஜையையும் தரிசனம் செய்வது மிகவும் ஸ்ரேஷ்டத்தைக் கொடுக்கும்.
சிவ லிங்கத்தில், பிரும்மா , விஷ்ணு , சிவன் மூவருமே அடக்கமாதலால், சிவலிங்க வழிபாடு செய்தல் சர்வா பீஷ்டங்களையும் கொடுக்கும்.
இரவு எந்த மாதிரியான பூஜை செய்யப்படுகிறது?
முதல் ஜாமத்தில், மூர்த்திக்கு, பால், தயிர்,நெய் , கோமயம், கோசலம் ஆகிய பஞ்ச திரவியங்களால், அபிஷேகம் செய்து, வில்வம் தாமரை மலர்களால் அர்ச்சனை செய்வார்கள்.
இரண்டாம் ஜாமத்தில், பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து, சந்தனம் சாற்றி , தாமரை மற்றும் துளசியால் அர்ச்சனை செய்வார்கள்.
மூன்றாம் ஜாமத்தில்,தேனால் அபிஷேகம் செய்து, முல்லை மற்றும் வில்வ தளம் கொண்டு அர்ச்சனை செய்வார்கள்.
நான்காம் ஜாமத்தில், கரும்பு சாறு கொண்டு அபிஷேகம் செய்து, நந்தியாவட்டை மற்றும் நீலோத்பவ மலர்களால் அர்ச்சனை செய்வார்கள்.
உபவாசம் இருப்பவர்கள், பகலில், சிவபுராணம்,தேவாரம், திருவாசகம் படிக்க வேண்டும். முடிந்தவரை சிவ நாமத்தினை ஜபிக்க வேண்டும்.
கோயிலுக்குச் செல்பவர்கள், முதலில் நந்தி பெருமானிடம், பகவானைத் தரிசிக்க உத்திரவு பெற்ற பின்பே லிங்க மூர்த்தியைக் தரிசனம் செய்ய வேண்டும்.
அன்றைய தினம், உலகெலாம் உணர்ந்தோதற்கரியவனும், நிலவுலாவிய நீர்மலி வேணியனும் ஆன சிவபெருமானின் அருளைப் பெறப் பிரார்த்திப்போம்.
- மாலதி சந்திரசேகரன்