திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், வெள்ளிக்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் ஆயிரங்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, மூலவர் சன்னதி எதிரே உள்ள நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் பல்வேறு இடங்களில் உள்ள 8-க்கும் மேற்பட்ட நந்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு, வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதில், பல ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகர், கோயில் 3-ஆம் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அருணாசலேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டதால், கோயிலில் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.