பொங்கல் பண்டிகையையொட்டி, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பார்வேட்டை உற்சவம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி, பார்வேட்டை உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உற்சவர், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி, கோயில் மலையில் இருந்து இறங்கி வாலாஜாபாதை அடுத்துள்ள பழைய சீவரம் கோயிலுக்கு வந்தடைந்தார்.
பின்னர், அங்கிருந்து திருமுக்கூடல் கிராமத்தில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய 3 ஆறுகள் கூடும் இடத்தில் எழுந்தருளினார்.
இந்த நிகழ்ச்சியில், வரதராஜப் பெருமாள், பழைய சீவரம் லட்சுமி நரசிம்மப் பெருமாள், சாலவாக்கம் சீனிவாசப் பெருமாள், காவான் தண்டலம் லட்சுமி நாராயண சுவாமி, திருமுக்கூடல் அப்பன் வேங்கடேசப் பெருமாள் என ஐந்து பெருமாள்களும் ஒரே இடத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை அதிகாலை உற்சவர் வரதராஜ பெருமாள் கோயிலை வந்தடைந்தார்.
பழைய சீவரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலுக்கு வந்தடைந்த வரதராஜப் பெருமாள்.