பொன்னேரி அருகே பூமிக்குள் புதைந்திருந்த நான்கு கற்சிலைகள் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
பொன்னேரி வட்டத்துக்கு உள்பட்டது அண்ணாமலைச்சேரி கிராமம். இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்காக வெள்ளிக்கிழமை அஸ்திவாரம் தோண்டும் பணி நடைபெற்றது.
அப்போது தொழிலாளர்கள் கடப்பாரையால் குத்தியபோது, கீழே இறங்காமல் சப்தம் கேட்டது.
இதையடுத்து, சுற்றியுள்ள மண்ணை அகற்றிவிட்டு பார்த்தபோது, 2 பெருமாள் சிலைகள், தலைப்பகுதியின்றி ஒரு அம்மன் சிலை, நந்தி சிலை ஆகியன புதைந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னேரி வட்டாட்சியர் ஐவண்ணன் அங்கு விரைந்து சென்று, சிலைகளை பார்வையிட்டார்.
பின்னர், வருவாய்த் துறையினர் அந்த சிலைகளை பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.
கண்டெடுக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் விரைவில் தொல்லியல் துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.