காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் யுனெஸ்கோ மற்றும் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தில் உள்ள புராதனச் சின்னங்களும், கோயில்களும் பாரம்பரிய சிறப்புமிக்கவை. யுனெஸ்கோ விதி
முறைகளின்படி இவற்றை முறையாக சீரமைத்தால் தான் அவற்றுக்கு சர்வதேச அந்தஸ்து கிடைக்கும். புராதன சின்னங்களுக்கு சர்வதேச அந்தஸ்து கிடைக்க யுனெஸ்கோ பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் யுனெஸ்கோ குழுவினர் அபூர்வா சின்ஹா, கிரிகுமார் ஆகியோரும், தொல்பொருள் ஆய்வுத்துறை சார்பில் இந்திய தொல்லியல் துறை உதவி கண்காணிப்பாளர் பகவான் சாரதி, காஞ்சிபுரம் துணை வட்ட அலுவலர் சரவணன் ஆகியோர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
1995-ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்துக்குப் பிறகு 22 ஆண்டுகள் கழித்து கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
இந் நிலையில் காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி நடைபெற்ற திருப்பணியின்போது கோயிலின் பழைமை மாறாமல் பணிகள் செய்யப்பட்டதா, புதிதாக சீரமைக்கப்பட்ட பகுதியில் பழைய கட்டுமானம் அகற்றப்பட்டுள்ளதா அந்தப் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளன என யுனெஸ்கோ அமைப்பு மற்றும் தொல்லியல் துறையைச் சேர்ந்தவர்கள் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்த அறிக்கை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர்.
இந்த ஆய்வின்போது வரதராஜப் பெருமாள் கோயில் உதவி ஆணையர் விஜயன், குமர கோட்டம் கோயில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.