கும்பாபிஷேகம் செய்வதன் முக்கியத்துவம் என்ன?

முன்னொருகாலத்தில் கோயிலை மையமாகக் கொண்டே பெரிய ஊர்கள் விளங்கின. அந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்ற கோயில்களை...
கும்பாபிஷேகம் செய்வதன் முக்கியத்துவம் என்ன?

முன்னொருகாலத்தில் கோயிலை மையமாகக் கொண்டே பெரிய ஊர்கள் விளங்கின. அந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்ற கோயில்களைக் கட்டி முடிக்கும் போதும் சரி, கட்டி முடித்து பன்னிரண்டு ஆண்டுகள் கழித்தும் சரி, கும்பாபிஷேகம் செய்யும் வழக்கம் இருந்து வருகிறது.

கும்பாபிஷேகத்திற்கான விதிகளை வாமதேவர் என்கிற வடமொழி நூலாசிரியர் சிவபெருமான் முருகனுக்குக் கூறும் விதமாக விவரித்து எழுதி இருக்கிறார். கோயிலை வேத சாஸ்திர முறைப்படி கருங்கற்களைக் கொண்டு கட்டி அதில் யந்திர ஸ்தாபனம் செய்து தெய்வத் திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்கிறார்கள்.

கோயிலுக்குச் செய்யப்படும் கும்பாபிஷேகம் நான்கு விதமான நேரங்களில் செய்யப்படுகின்றன. அவை, ஆவர்த்தம் - புதிய கோயில் ஒன்றைக் கட்டி அங்குப் புதிதாக இறைவனின் திருவுருவத்தை ஸ்தாபிதம் செய்யும் போது செய்யப்படுகிறது. அநாவர்த்தம் - வெள்ளம், மழை, பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் சேதமடைந்த கோயில்களை புதுப்பித்து மறு பிரதிஷ்டை செய்வதாகும். புனராவர்த்தம் - காலத்தால் சிதிலமடைந்த திருக்கோயில்களைப் புதுப்பித்து புனர்நிர்மாணம் செய்வதாகும். அந்தரிதம் - மனிதர்களின் தீமைகளால் புனிதம் இழந்த கோயில்களை மீண்டும் புதுப்பித்து புனிதப்படுத்துவதாகும்.

முதலில் ஆகம சாஸ்திரப்படியும், சிற்ப சாஸ்திரப்படியும் முறையாகக் கல்லினால் வடிவமைத்த தெய்வத் திருவுருவங்களை தானிய வாசம், ஜலவாசம் செய்வார்கள். தங்கம், வெள்ளி அல்லது செம்பு தகட்டில் மந்திரங்களை எழுதி முறைப்படி ஒரு மண்டலம்(48 நாட்கள்) பூஜை செய்து, அவற்றைத் தெய்வ சிலைகளைப் பிரதிஷ்டை செய்யும் இடத்தில் பதிய வைப்பார்கள். கல்லினாலும், மண்ணாலும், உலோகத்தாலும், மனிதனால் உருவாக்கப்பட்ட தெய்வ உருவங்களுக்குச் சக்தியை கொடுப்பதற்காகச் செய்யப்படும் வேள்வி முறைகளில் ஆவாகனம், யாகசாலையில் மந்திரம், கடஸ்தாபனம் ஆகிய மூன்று வழிமுறைகள் மிக முக்கியமானவை.

கும்பாபிஷேகத்தை அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் என்று சொல்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம். பீடத்தின் மீது வைக்கப்படும் தெய்வ திருவுருவங்கள் உறுதியுடன் நிலைத்து நிற்க கொம்பரக்கு சுக்கான்தான், குங்குலியம், கற்காவி, செம்பஞ்சு, ஜாதிலிங்கம், தேன்மெழுகு, எருமையின் வெண்ணெய் ஆகிய எட்டுவகை மருந்துகளைக் கலந்து சார்த்தப்படும். இதை அஷ்ட பந்தனம் என்றும் குறிப்பிடுகிறோம்.

கும்பாபிஷேகத்தில் மிக முக்கியமானவை, சொல்லப்படும் மந்திரங்கள். மந்திரம் என்பதற்கு சொல்பவனைக் காப்பது என்று பொருள். அவற்றைச் சரியான உச்சரிப்புடன், மிகுந்த பக்தியுடன் சொல்வது மிகவும் முக்கியமானது. அந்த மந்திரங்களைச் சொல்லி இறைசக்தியைத் தருவித்து ஒருங்கிணையச் செய்து ஒன்றாகக் குவியச் செய்து இறைவனின் கருவறையில் அதன் சக்தியை நிலை பெறச் செய்தால் தான் அது இறைவனின் உறைவிடமாக மாறும்.

தெய்வ சக்திகள் உருவேற்றப்பட்ட கலச தீர்த்தங்களால் சிலைகளுக்கு அபிஷேகம் செய்து கருவறையில் யந்திரங்கள் பதித்து சிலைகளைப் பிரதிஷ்டை செய்வார்கள். கோபுரத்தின் மேலுள்ள கலசங்களுக்கும் உயிரூட்டப்பட்ட சக்தி வாய்ந்த கலச தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்படும். ஆகம விதிப்படியும் சாஸ்திர முறைப்படியும் தெய்வ விக்கிரகங்களின் சக்தியையும் கோபுர கலசத்தில் உருவேற்றிய சக்தியையும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊக்கப்படுத்தி மனித வாழ்க்கை மேம்படுவதற்காக நடைபெறுவதே மகா கும்பாபிஷேகம்.

மகா கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் இறைவனை வணங்குவோருக்கு முப்பத்து முக்கோடி தேவர்களும் ஆசி வழங்குவார்கள் என்பது வழி வழியாக இருந்து வரும் நம்பிக்கை. கும்பாபிஷேகத்தன்று வணங்க முடியாதவர்கள் அதனைத் தொடர்ந்து நடைபெறும் 48 நாள் மண்டல பூஜையில் கலந்து கொண்டு கடவுளை வணங்கினால் இறைவனின் அருளைப் பூரணமாக பெறலாம். இப்படிப் பலமுறை கும்பாபிஷேகங்கள் செய்யப்பட்ட பழமை வாய்ந்த கோயில் கோபுரங்களைத் தரிசனம் செய்யும் போதும், அந்தக் கோயிலுக்குள் நுழையும் போதும் ஓர் அற்புத சக்தியானது நம்மை தீண்டப்படுவதை ஆன்மிக அன்பர்கள் உணர்ந்திருக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com