நாகை மாவட்டம், திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயிலின் மாசிமகப் பெருவிழா தெப்ப உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
நாகை மாவட்டம், திருமருகலை அடுத்த திருக்கண்ணபுரத்தில் உள்ளது சௌரிராஜப் பெருமாள் கோயில். 4 ஆழ்வார்களால் 128 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம், பெருமாளின் கீழை வீடாகப் போற்றப்படுகிறது.
இக்கோயிலில் மாசிமகப் பெருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. மாசிமகப் பெருவிழா தேரோட்டம் மார்ச் 10-ஆம் தேதி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தெப்ப உற்சவம், வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர், சௌரிராஜப் பெருமாள் உபய நாச்சியார்களுடன் நூதன பங்களா தெப்பத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து இரவு 11 மணியளவில் தெப்ப உத்ஸவமும் நடைபெற்றது.
முன்னதாக, வெள்ளிக்கிழமை காலை விடையாற்றி திருமஞ்சனம் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில், தஞ்சை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோயில் அறங்காவலர்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.