திருவள்ளூர் அருகே வடபாதி செல்லியம்மன் கோயில் திருவிழாவில் திங்கள்கிழமை இரவு 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபட்டனர்.
திருவள்ளூரை அடுத்த விடையூர் கிராமத்தில் உள்ள இக்கோயிலில் 42-ஆவது ஆண்டு திருவிழா கடந்த 11 நாள்களாக நடைபெற்றது. இதையொட்டி, நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் வடபாதி செல்லியம்மன், கொள்ளாபுரி அம்மன் வீதியுலா நடைபெற்றது.
இதன் முக்கிய நிகழ்ச்சியாக திங்கள்கிழமை இரவு பூக்குழி விழா நடைபெற்றது. விழாவில், தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் பக்தர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒவ்வொருவராக பூக்குழியில் இறங்கி வழிபட்டனர்.
இதில் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு செல்லியம்மனை தரிசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருவிழாக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.