கேரள மாநிலம், சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலின் நடை இவ்வாண்டுக்கான மண்டலப் பூஜைக்காக புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது.
இதற்காக பம்பையில் இருந்து சந்நிதானத்துக்கு பக்தர்கள் அனைவரையும் பிற்பகல் 2 மணி முதல் அனுமதித்தது திருவாங்கூர் தேவஸம் நிர்வாகம்.
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜையை நடத்துவதற்கு, சபரிமலை ஐயப்பன் கோயில் புதிய மேல்சாந்தியாக திருச்சூரைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். அவர் புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் கோயிலின் நடையைத் திறந்தார்.
அதேபோல் மாளிகைபுரம் கோயில் மேல்சாந்தியாக அனீஷ் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். மாளிகைபுரத்தம்மன் கோயிலின் நடையைப் பக்தர்களின் தரிசனத்துக்காக அவர் திறந்து வைத்தார்.
இதையடுத்து வியாழக்கிழமை முதல் இரு கோயில்களிலும்அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். அதன்பின், 3.30 மணி முதல் 11.30 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பிற்பகல் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாட்டுடன் கோயிலின் நடை சாத்தப்படும். இந்த மண்டலப் பூஜை டிசம்பர் 26-ஆம் தேதி முடிவடைந்து, அன்றைய இரவு நடை சாத்தப்படும்.
மகரவிளக்கு பூஜை
மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் டிச.30-ஆம் தேதி மாலை 5 மணிக்குத் திறக்கப்படும். ஜன. 14 ஆம் தேதி பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தரிசனமும் சந்நிதானத்தின் மகரவிளக்கும் ஏறப்படும். அத்துடன் ஜன.19 ஆம் தேதி பக்தர்களின் தரிசனம் நிறைவு பெறுகிறது. ஜன.20 ஆம் தேதி பந்தளம் ராஜ குடும்பத்தினர் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வதுடன் நடை அடைக்கப்படும்.
அபராதம்
சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் பம்பை ஆற்றில் குளித்தால் பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை. குளிப்பவர்கள் சோப்பு, ஷாம்பு போட்டு குளிப்பது, உள்ளாடைகள், மாலைகளை வீசி எறிவது, எச்சில் இலைகளைப் போடுவது ஆகிய காரணங்களால் பம்பை ஆறு அசுத்தமாகிறது.
இதைத் தடுக்கும் நோக்கில், இவ்வாண்டு பத்தணந்திட்டா மாவட்ட நிர்வாகம் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. தடையை மீறுவோருக்கு 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.