திருவள்ளூரில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் சார்பில் வள்ளலாரின் 195-ஆவது அவதார நாள் விழாவை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் பூஜைகள், அன்னதானம் வியாழக்கிழமை நடைபெற்றன.
திருவள்ளூர் திரிபுரசுந்தரி உடனுறை தீர்த்தேஸ்வரர் கோயிலில் அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து சன்மார்க்க சொற்பொழிவும், கயிலாய வாத்திய இசையுடன் தீபாராதனையும் நடைபெற்றது. இதில், சமரச சுத்த சன்மார்க்கத்தின் தலைவர் சந்திரன், செயலாளர் சுகுமாரன், பொருளாளர் தில்லி பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொன்னேரியில்...
பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே அருட்பிரகாச வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சபை அமைந்துள்ளது. இங்கு கடந்த 13 ஆண்டுகளாக ஏழை, எளியோருக்கு நாள்தோறும் 200 பேருக்கு மதிய நேரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. வள்ளலார் அவதார தினத்தையொட்டி, இங்குள்ள சன்மார்க்க சத்திய சபையில் வியாழக்கிழமை காலை அகவல் ஓதுதல், சன்மார்க்க கொடியேற்றுதல், திருஅருட்பா ஓதுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து, மதியம் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் திருவருட்பா சொற்பொழிவும், இரவு ஜோதி தரிசனமும் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை சன்மார்க்க சபையின் செயல் தலைவர் மனோகரன், பொதுச் செயலர் கலைச்செல்வன், பொருளாளர் நடராஜன், துணைச் செயலர் தயாளன், சபை நிர்வாக பொறுப்பாளர் வைத்தீஸ்வரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.