திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பவித்ர மாலைகள் சமர்ப்பணம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முதல் வருடாந்திர பவித்ரோற்சவம் நடைபெற்று வருகிறது. இதன் 2-ஆம் நாளான திங்கள்கிழமை காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர சுவாமிக்கு பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனம், சிவப்பு சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருள்களால் ஸ்நபன திருமஞ்சனத்தை அர்ச்சகர்கள் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, கோயிலில் உள்ள அனைத்து மூலவர் மற்றும் உற்சவ சிலைகளுக்கு மஞ்சள், பச்சை, சிகப்பு ,நீலம், கருப்பு, ஆரஞ்சு, வெள்ளை உள்ளிட்ட பல்வேறு பட்டு நூலிழைகளால் ஆன பவித்ர மாலைகளை அர்ச்சகர்கள் அணிவித்தனர்.