காரைக்கால் மாவட்டம், அகலங்கண்ணு அரசலாற்றில் நடைபெறும் காவிரி மகா புஷ்கரம் விழாவின் 5}ஆம் நாளான சனிக்கிழமை 23 ஆண்டுகளுக்குப் பின்னர் விழுதியூர் வரதராஜ பெருமாள் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது.
அகலங்கண்ணு பகுதி அரசலாற்றில் நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு, செப். 12}ஆம் தேதி முதல் காவிரி மகா புஷ்கரம் விழா நடைபெற்று வருகிறது. 12 நாள்கள் நடைபெறும் இவ்விழாவின் 5}ஆம் நாளான சனிக்கிழமை காலை 6 மணியிலிருந்து பக்தர்கள் புனித நீராடினர்.
இந்நாளின் சிறப்பு நிகழ்வாக, விழுதியூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் 23 ஆண்டுகளுக்குப் பிறகு அகலங்கண்ணு தீர்த்தக்கரைக்கு எழுந்தருளி, தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது, சுவாமியுடன் வந்த பக்தர்கள் புனித தீர்த்தத்தில் நீராடினர். தொடர்ந்து, பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது.