மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி கொலு உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியதை முன்னிட்டு அங்கு அகண்ட தீபத்தை பங்காரு அடிகளார் ஏற்றி வைத்தார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நவராத்திரி உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா செவ்வாய்க்கிழமை அதிகாலை மங்கல இசையுடன் தொடங்கியது.
கருவறை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சித்தர் பீடம் வந்த பங்காரு அடிகளாருக்கு பாதபூஜை செய்து பக்தர்கள் வரவேற்றனர். பகல் 12.15 மணிக்கு ஈரச் செவ்வாடையுடன் வந்த அடிகளார் கருவறையில் சிறப்பு பூஜைகளை செய்தார். பின்னர் பெரிய அகண்டத்தில் தீபம் ஏற்றினார்.
கருவறை அருகே அமர்ந்திருந்த பக்தர்கள் கூட்டத்தில் இருந்த முதியவரை அடிகளார் அழைத்து எரிந்து கொண்டிருந்த அகண்டத்தை அவரிடம் அளித்தார்.
பீடத்தின் பிரகாரத்தின் முன்புறமாக தாமரை சக்கரம் தொடர்ந்து வலது மூலைகளில் முக்கோணம், அறுகோணம், செவ்வகம் உள்ளிட்ட பல்வேறு சக்கரங்கள் வரையப்பட்டு அவற்றின் மீது அங்கு இருந்த பக்தர்கள் கைகளில் பல்வேறு வகை விளக்குகளை ஏந்தியபடி சென்றனர். மேளதாளம் முழங்க அடிகளார் தலைமையில் கொண்டு வரப்பட்ட அகண்ட தீபம் கருவறையின் அக்னி மூலையில் உள்ள தனிமேடையில் வைக்கப்பட்டது.
இதில் பக்தர்கள் முக்கூட்டு எண்ணெய் ஊற்றி வழிபட்டனர். அதைத் தொடர்ந்து தொடங்கிய நவராத்திரி லட்சார்ச்சனை, வரும் 30-ஆம் தேதி வரை நடக்கிறது.
சித்தர்பீட வளாகத்தில் நவராத்திரி கொலு கண்காட்சியில் பல்வேறு வகையான பொம்மைகள் வைக்கப்பட்டு உள்ளன. சித்தர்பீடத்தின் முன்புறம் மாதாந்திர அமாவாசை வேள்வி பூஜை நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் துணைத் தலைவர்கள் கோ.ப. செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ் ஆகியோர் தலைமையில் சென்னை ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.