அருணாசலேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி, புதன்கிழமை இரவு நடைபெற்ற ஸ்ரீபராசக்தியம்மன் வீதியுலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நவராத்திரி விழாவின் 2-வது நாளான வியாழக்கிழமை ஸ்ரீராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.
நவராத்திரி விழாவின் 2-வது நாளான வியாழக்கிழமை ஸ்ரீராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி, புதன்கிழமை இரவு நடைபெற்ற ஸ்ரீபராசக்தியம்மன் வீதியுலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி, மூலவர் ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
ஸ்ரீபராசக்தியம்மன் வீதியுலா: இதைத் தொடர்ந்து, இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் ஸ்ரீபராசக்தியம்மன் எழுந்தருளினார். கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீபராசக்தி அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மாட வீதிகளில் ஸ்ரீபராசக்தி அம்மன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீராஜராஜேஸ்வரி அலங்காரம்: நவராத்திரி விழாவின் 2-ஆவது நாளான வியாழக்கிழமை ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, மாட வீதிகளில் வலம் வந்த அம்மனை ஏராளமான பக்தர்கள் வணங்கினர்.
தொடர் நிகழ்ச்சிகள்: இந்தக் கோயிலின் நவராத்திரி விழா வரும் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை (செப்.22) ஸ்ரீகஜலட்சுமி அலங்காரத்திலும், சனிக்கிழமை (செப்.23) ஸ்ரீமனோன்மணி அலங்காரத்திலும், வரும் 24-ஆம் தேதி ஸ்ரீரிஷப வாகனத்தில் ஸ்ரீபராசக்தியம்மன் வீதியுலாவும் நடைபெறுகின்றன. மேலும், 24-ஆம் தேதி மாலை பஞ்சமூர்த்திகள் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.
வரும் 25-ஆம் தேதி ஸ்ரீஆண்டாள் அலங்காரத்திலும், 26-ஆம் தேதி ஸ்ரீசரஸ்வதி அலங்காரத்திலும், 27-ஆம் தேதி லிங்கபூஜை அலங்காரத்திலும், 28-ஆம் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்திலும் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் அருள்பாலிக்கிறார்.
நிறைவு விழா: செப்டம்பர் 29-ஆம் தேதி நவராத்திரி விழாவின் நிறைவு விழா நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை திருக்கல்யாண மண்டபத்தில் ஸ்ரீபராசக்தி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது. இத்துடன் இந்தக் கோயிலின் நவராத்திரி விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெகந்நாதன் மற்றும் கோயில் ஊழியர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com