திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டு தின விழா கொண்டாடப்படுவதையொட்டி, அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்தது.
இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப் புத்தாண்டு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான திருவிழா சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படும்.
காலை 8 மணிக்கு ஸ்ரீசம்பந்த விநாயகர் சன்னதி எதிரே தமிழ்ப் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் அதிகப்படியான பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள் என்பதால், ஸ்ரீஅருணாசலேஸ்வரர் சன்னதி, ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சன்னதிகளில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்தது.