செங்கல்பட்டை அடுத்த கொல்லைமேடு அம்மணம்பாக்கம் சுயம்பு சமயபுரம் மாரியம்மன் மகா சக்தி பீடத்தில் செவ்வாய்க்கிழமை சித்திரை பெருவிழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. மாலை அம்மனுக்கு மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில், கண் நோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பக்தர்கள் மா விளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர்.
திங்கள்கிழமை மதியம் அம்மணம்பாக்கம் ஏரிக்கரையில் இருந்து நேர்த்திக் கடன் விரதம் மேற்கொண்ட பக்தர்கள், தீச்சட்டி ஏந்தி வீதி உலா வந்து அம்மனுக்கு சமர்ப்பண வழிபாடு செய்தனர்.
செவ்வாய்க்கிழமை 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. பின்னர், அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
இரவு உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
பின்னர் அம்மன் அம்மணம்பாக்கம் கோயிலில் இருந்து புறப்பட்டு, கிராமங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. முக்கிய பகுதிகள் வழியாகச் சென்று புதன்கிழமை அதிகாலை கோயிலைச் சென்றடைந்தது.
விழாவுக்கான ஏற்பாடுகளை மகா சக்தி பீடம் நிறுவனர் மாரிதாசர்என்கிற எஸ்.எம்.கண்ணுசாமி, அமிர்தம் கண்ணுசாமி, பொறுப்பாளர்கள் மணிகண்டன், சுந்தரவடிவேலு மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.