சபரிமலை ஐயப்பன் கோயில் ஓணம் பண்டிகையையொட்டி பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றது. இன்று முதல் தொடர்ந்து 27-ம் தேதி இரவு வரை கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும்.
சபரிமலை ஐயப்பன் கோயில் ஓணம் பண்டிகைக்காக நேற்று மாலை கோயில் நடை திறக்கப்பட்டது. பாதைகள் சீரமைக்கும் வரை பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் எனக் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
கேரளாவில் கடந்த பத்து நாட்களாகப் பெய்த கனமழை காரணமாக சபரிமலை செல்லும் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. ஆவணி மாத பூஜைகளுக்கு பக்தர்கள் யாரும் செல்லமுடியவில்லை. அதேபோன்று ஓணம் பண்டிகை பூஜைகளின் போதும் பக்தர்களை தேவசம்போர்டு அனுமதிக்கவில்லை.
பம்பையில் வெள்ளம் அதிகரித்துள்ளதால் மாற்றுப்பாதை உள்ளிட்ட விபரங்களை தேவசம்போர்டு வெளியிட்டது. ஆனால், கேரள உயர் நீதிமன்றம் இதற்கு அனுமதி மறுத்துவிட்டது. சாலைகள் சீராகும் வரை சபரிலையில் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என தேவசம்போர்டு உத்தரவிட்டது.
நேற்று மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இன்று முதல் 27-ம் தேதி வரை ஓணம் பூஜைகளும், வழக்கமான பூஜைகளும் நடைபெறும். இந்நிலையில், பக்தர்கள் கூட்டமின்றி சரண கோஷம் இன்றி குறைந்த அளவு ஊழியர்கள் மட்டுமே சபரிமலையில் கூடியுள்ளதால் சபரிமலை வெறிச்சோடிய நிலையில் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.