புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருவள்ளூர் வைத்திய வீரராகவர் கோயிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, சிறப்பு ஆராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வைத்திய வீரராகவர் காட்சியளித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
பூங்கா நகரில்...
இதேபோல், திருவள்ளூர் பூங்கா நகரில் உள்ள ஜல நாராயண பெருமாள் கோயிலில், ஜல நாராயணி தாயார் சமேத ஜல நாராயண பெருமாளுக்கு ஏலக்காய்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
மேலும், அதே வளாகத்தில் உள்ள உற்சவர் பெருமாள் மற்றும் பத்மாவதி ரிஷப வாகனத்திலும், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும், விநாயகர் மூஞ்சுறு வாகனத்திலும் பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.
புட்லூரில்...
அதேபோல், புட்லூரில் உள்ள கோயிலில் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காக்களூரில்...
காக்களூர் ஆஞ்சநேயர் கோயில், பேரம்பாக்கம் போளீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
காஞ்சிபுரத்தில்...
காஞ்சிபுரம், ஜன.1: காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரேஸ்வரர், வரதராஜபெருமாள், கச்சபேஸ்வரர், முக்தீஸ்வரர், குமரகோட்டம் முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதோடு, புறப்பாடு சேவையில் பக்தர்களுக்கு உற்சவமூர்த்திகள் அருள்பாலித்தனர்.
கோயில்களில் அதிகாலையே திரளான பக்தர்கள் வந்து, அர்ச்சனை செய்தும், விளக்கேற்றியும் வழிபட்டனர்.
இதில், வெளிமாநில சுற்றுலா பயணிகள் உள்பட காஞ்சிபுரம் வாசிகள் திரளானோர் கலந்துகொண்டு புத்தாண்டை கொண்டாடினர்.
புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி, காஞ்சி நகர் முழுவதும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.