திருமலையில் திங்கள்கிழமை முதல் மீண்டும் சுப்ரபாத சேவை தொடங்கப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருமலையில் அதிகாலை ஏழுமலையானுக்கு முதல் சேவையாக சுப்ரபாத சேவை நடைபெறுவது வழக்கம். அதற்கு பிறகு, தோமாலை, அர்ச்சனா என வரிசையாக ஆர்ஜித சேவைகள் ஏழுமலையானுக்கு நடத்தப்படும். உறக்கத்திலிருக்கும் ஏழுமலையானை சுப்ரபாதம் பாடி துயில் எழுப்புவது திருமலையின் வைகானச ஆகம விதிகளில் ஒன்று.
ஆனால் மார்கழி மாதம் மட்டும் ஆண்டாள் ஆழ்வாரின் பெருமைகளை போற்றும் வகையில் திருமலையில் சுப்ரபாத சேவை ரத்து செய்யப்பட்டு, அவர் அருளிச் செய்த திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்படும்.
அதன்படி கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி முதல் ஜனவரி 14-ஆம் தேதி வரை திருமலையில் திருப்பாவை பாராயணம் செய்யப்பட்டது. மார்கழி மாதம் முடிந்ததையடுத்து வழக்கம் போல் திங்கள்கிழமை முதல் சுப்ரபாத சேவை தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.