திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கல்யாண மண்டபங்களை இணையவழி மூலம் முன்பதிவு செய்யும் வசதியை தேவஸ்தானம் வரும் 24-ஆம் தேதி அன்று தொடங்க உள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆந்திரம், தெலங்கானா, தமிழ்நாடு, புதுதில்லி, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கல்யாண மண்டபங்களை கட்டி உள்ளது. தேவஸ்தான கல்யாண மண்டபங்களின் வாடகை குறைவாக இருப்பதால் இதில் திருமணம் நடத்த பக்தர்கள் முன் வருகின்றனர். இந்த கல்யாண மண்டபங்கள் தேவைப்படுவோர் சம்பந்தப்பட்ட தேவஸ்தான அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கல்யாண மண்டபங்களின் முன்பதிவை தேவஸ்தானம் வரும் 24-ஆம் தேதி ரத சப்தமி முதல் இணையவழி படுத்த உள்ளது.
கல்யாண மண்டபங்கள் தேவைப்படுவோர் தேவஸ்தான இணையதளத்திற்கு சென்று தங்களுக்கு வேண்டும் பகுதியில் உள்ள தேவஸ்தான கல்யாண மண்டபங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த ஆன்லைன் முன்பதிவை சித்தூர் மாவட்டத்திலிருந்து தொடங்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அதன்படிசனிக்கிழமை (ஜனவரி 20) முதல் கல்யாண மண்டபங்களின் முன்பதிவு முற்றிலும் ரத்து செய்யப்பட உள்ளது. மேலும் கல்யாண மண்டபங்கள் முன்பதிவு செய்ய விரும்புவர்கள் அஞ்சலகத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்தும் சமர்ப்பிக்கலாம்.
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய தெரியாதவர்கள் தேவஸ்தான கல்யாண மண்டங்களின் மேலாளரை அணுகி அவரின் உதவியுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தும் சமர்ப்பிக்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.