திருவள்ளூர், வைத்திய வீரராகவர் கோயில் பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் புடைசூழ வீரராகவர் பவனி வந்தார்.
திருவள்ளூர் வீரராகவர் கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும்.
தற்போது, இக்கோயிலில் 10 நாள்கள் தை மாத பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடந்து வருகிறது. இதில், நாள்தோறும் இருவேளை வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் 7-ஆம் நாளான வெள்ளிக்கிழமை அதிகாலையில் வீரராகவர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் 60 அடி உயரமும், 21 அடி அகலமும் கொண்ட தேருக்கு எழுந்தருளினார்.
அதைத்தொடர்ந்து, காலை 7 மணிக்கு தேர்த்திருவிழா தொடங்கியது. தேரடியிலிருந்து தேர் புறப்பட்டு பனகல் தெரு, குளக்கரைச் சாலை, பஜார் வீதி, மோதிலால் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. மீண்டும் தேரடிக்கு வந்ததும் தேர் நிலை நிறுத்தப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வில் பங்கேற்கும்
ஒவ்வொருவரின் வேண்டுதலையும் வீரராகவர் நிறைவேற்றித் தருவார் என்ற நம்பிக்கை இருப்பதால், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துணைக் கண்காணிப்பாளர் புகழேந்தி தலைமையில், ஆய்வாளர்கள் வெங்கடேசன், பாலு உள்ளிட்ட போலீஸார் சிறப்பாக செய்திருந்தனர்.