ஏழுமலையானின் முன்பு ஸ்ரீமன் நியாயசுதா பாராயணத்தை வேத பண்டிதர்கள் தொடங்கினர்.
ஸ்ரீஜெயதீர்த்தரின் ஆராதனை உற்சவத்தை முன்னிட்டு கடந்த 21-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையும், மீண்டும் வரும் 29-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரையிலும் இந்தப் பாராயணம் ஏழுமலையானின் முன்பு நடைபெற உள்ளது. அதன்படி சனிக்கிழமை காலை 6 மணிக்கு பாராயணம் தொடங்கியது.
இதன் ஒரு பகுதியாக தங்க கோபுரத்தில் உள்ள விமான வெங்கடேஸ்வர சுவாமி முன் 11 வேத பண்டிதர்கள் அமர்ந்து கொண்டு தினந்தோறும் வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், தர்ம சாஸ்திரங்கள் உள்ளிட்டவற்றைப் பாராயணம் செய்வர்.
இந்தப் பாராயணத்தை ஏழுமலையானின் முன் செய்வதால் உலகுக்கே நன்மையும் அமைதியும் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே, பல ஆண்டு காலமாக தேவஸ்தானம் இதற்கு ஏற்பாடு செய்து வருகிறது. மேலும், தேவஸ்தானத்தின் தாச சாகித்ய திட்டத்தின் கீழ் கர்நாடக மாநிலம், உடுப்பியில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோயிலிலும் ஸ்ரீமன் நியாயசுதா பாராயணம் நடத்தப்பட்டு வருகிறது.