சங்கரன் கோயிலில் ஆடித்தபசு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். அரியும், சிவனும் வேறல்ல என்பதை உணர்த்தும் பொருட்டு அன்னை கோமதி எனும் உமை தவம் இருந்த தலம் அது.
அம்பிகை ஈசனைத் திருமாலுடன் தோன்ற வேண்டினார். அதற்கு ஈசன் பொதிகை மலைபுன்னை வனத்தில் தவமியற்றக் கூறினார். அம்மையும் ஊசி முறையில் நின்று தவமியற்றினாள். இறைவன் ஆடிப் பவுர்ணமி உத்திராட நட்சத்திரத்தில் பார்வதியின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் தோன்றினார்.
அதே வேளையில் சிவபிரான் சங்கர லிங்கராக எழுந்தருளி அம்பாளை மணம் செய்த வைபவமும் உண்டு. ஆடி மாதம் சங்கரன் கோயிலில் நடைபெறும் 12 நாள் திருவிழாவில் 11-ம் நாள் திருவிழாதான் ஆடித்தபசு.
ஆடிப் பவுர்ணமியில் நடைபெறும் ஆடித்தபசு விழாவில் காலை 9.00 மணிக்கு அம்பாளுக்குச் சிறப்பு வழிபாடு நடைபெறும். 12 மணிக்குத் தங்கச் சப்பரத்தில் அம்பாள் வீதி உலா வந்து தபசு மண்டபத்தில் இறங்குவாள். மாலை 4.00 மணிக்கு சுவாமி சங்கர நாராயணராக ரிஷப வாகனத்தில் தெற்கு ரதவீதி காட்சி மண்டபம் வருவார்.
பின் தபசு மண்டபத்தில் இருந்து அம்பாள், காட்சிப்பந்தல் வந்து பரிவட்ட மாலை மரியாதையுடன் சவாமியை மூன்று முறை வலம் வருவாள். பின் 6.15 மணிக்குச் சென்று சங்கரநாராயணராகத் தோன்றுவார். இரவு யானை வாகனத்தில் சங்கரலிங்கமாகப் புறப்பட்டு வருவார். பின் அம்பாள் திருக்கண் மாலை மாற்றிய பின் ஊஞ்சல் விழா நடைபெறும்.
9-ம் திருநாளான இன்று காலை கோமதி அம்பாள் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதைதொடர்ந்து, 11-ம் திருநாளான ஜூலை 27-ம் தேதி மாலை 6 மணிக்கு ஆடித்தபசுக் காட்சி நடைபெறும்.