இறைவனைக் கண்ணால் காண முடியுமா? மாணவன் கேள்விக்கு வாரியாரின் துணுக்குற வைத்த பதில்!!

கிருபானந்தவாரியார் தன் வீட்டு வாசலில் அமர்ந்து ஆன்மிக புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்த சமயம்...
இறைவனைக் கண்ணால் காண முடியுமா? மாணவன் கேள்விக்கு வாரியாரின் துணுக்குற வைத்த பதில்!!

கிருபானந்தவாரியார் தன் வீட்டு வாசலில் அமர்ந்து ஆன்மிக புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்த சமயம், அங்கு வந்த ஒரு மாணவன் ஐயா எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் கேட்கலாமா? 

என்னப்பா கேள்! என்றார் வாரியார். 

இறைவனைக் கண்ணால் காண முடியுமா?'

உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பி! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?

என்ன ஐயா! என்னைச் சுத்த மடையன் என்றா நினைத்தீர்கள்? எனக்கென்ன கண் இல்லையா? இந்த உடம்பைப் பிறந்தது முதல் பார்த்து வருகிறேன்.

தம்பி! நான் உன்னை மூடன் என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன். நீ படித்த அறிஞன்தான். ஆனால் நீ படித்த அறிவியல் விளக்கம் இல்லையே. கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும். காது இருந்தால் மட்டும் போதுமா? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும்.

உடம்பை நீ பார்க்கின்றாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா? 

ஆம். நன்றாகத் தெரிகின்றது.

அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?' 

என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை முறை சொல்வது? எல்லாம்தான் தெரிகின்றது?'

அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?' ஆம்! நன்றாக தெரிகின்றன. முழுவதும் தெரிகின்றதா? 

சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் முழுவதும் தெரிகின்றது என்றான்.

தம்பி! உன் உடம்பின் பின்புறம் தெரிகின்றதா? மாணவன் விழித்தான். 

ஐயா! பின்புறம் தெரியவில்லை.

என்ன தம்பி! முதலில் தெரிகின்றது தெரிகின்றது என்று பலமுறை சொன்னாய். இப்போது பின்புறம் தெரியவில்லை என்கின்றாயே. சரி, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா?'' 

முன்புறம் முழுவதும் தெரிகின்றதே. 

அப்பா! அவசரம் கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையும் காண்கின்றாயா? நிதானித்துச் சொல்... எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம் தெரிகின்றது.

தம்பி! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா? நன்கு சிந்தனை செய்து சொல்.

ஆம்! நன்றாகச் சிந்தித்தேச் சொல்கின்றேன். முன்புறம் எல்லாம் தெரிகின்றது.

தம்பி! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றதா? மாணவன் துணுக்குற்றான்.

நெருப்பை மிதித்தவன் போல் துள்ளினான். தன் அறியாமையை எண்ணி வருந்தினான். பின்பு தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், ஐயனே! முகம் தெரியவில்லை! என்றான்.

குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை. முன்புறம் முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில் சிறிதுதான் கண்டிருக்கிறாய். இருப்பினும் கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய். அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், நீயே சொல். 

ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.

தம்பி! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவது போல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.

ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன? சொல்லுங்கள். 

அப்பனே! அவை கடையில் கிடைக்காது. வேத ஆகமத்தில் விளைந்தவை அவை அதில்தான் கிடைக்கும். ஞான மூர்த்தியைக் காண இருநிலைக் கண்ணாடிகள் வேண்டும். ஒரு கண்ணாடி திருவருள், மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள், குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்.

தம்பி! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனைக் குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை. அந்த மாணவன் தன் தவற்றை உணர்ந்து வாரியாரின் காலில் விழுந்து வணங்கினான். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com