திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஆனி வருஷாபிஷேகத்தையொட்டி, கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்று, கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், கும்பங்கள் விமானதளத்துக்கு கொண்டுவரப்பட்டு, காலை 8.40 மணிக்கு மூலவர், சண்முகர், வெங்கடாஜலபதி, வள்ளி, தெய்வானை என வரிசையாக விமான அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மூலவர், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
இரவில் குமரவிடங்கப்பெருமான், வள்ளியம்மன் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.