பெரியபாளையத்தை அடுத்த தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோபூஜை, பூர்ணாஹுதி, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மிருஹங்கிரஹணம், அங்குரார்ப்பணம், கும்பாலங்காரம், முதல் கால யாக பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து சனிக்கிழமை இரண்டாம் கால யாக பூஜை, புதிய சிலைக்கு கண் திறத்தல், அஷ்டாத கிரியைகள், மூன்றாம் கால யாக பூஜை, கோபுரக் கலச பிரதிஷ்டை, அம்மன் பிரதிஷ்டை, அஷ்ட பந்தனம் சாத்துதல் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து கும்பாபிஷேக தினமான ஞாயிற்றுக்கிழமை நான்காம் கால யாக பூஜை, மஹா சங்கல்பம், மஹா பூர்ணாஹுதி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
அதன் பின், புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகத்தை நடத்தினர். பின்னர் மூலவருக்கு மஹா அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தில் தாமரைப்பாக்கம், அணைக்கட்டு, வெங்கல், புன்னப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை தாமரைப்பாக்கம் கிராம மக்கள் செய்திருந்தனர்.
திரிசூல காளியம்மன் கோயில்...
காஞ்சிபுரம், ஜூன் 24: திருப்புலிவனம் திரிசூல காளியம்மன் கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் திரிசூல காளியம்மன் கோயில் உள்ளது. சிதிலமடைந்திருந்த இக்கோயிலை புனரமைக்கும் பணி கடந்த சிலமாதங்களாக நடைபெற்று வந்தது. இப்பணி கடந்த சில நாள்களுக்கு முன்பு நிறைவுற்றது.
அதைத்தொடர்ந்து, இக்கோயில் மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, கடந்த 2 நாள்களாக கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, லட்சுமி, தன, கோ பூஜைகள், கால யாக வேள்விகள், அஷ்டபந்தன பூஜைகள் ஆகியவை நடத்தப்பட்டன. தொடர்ந்து, சனிக்கிழமை காலை 4ஆம் கால யாக வேள்வி நடத்தப்பட்டது. பின்பு, மேள தாளங்களுடன், வேதங்கள் முழங்க புனித நீர் கொண்டு வரப்பட்டது. சிவாச்சாரியார்கசக் புனித நீரை, கலசத்தின் மீது ஊற்றி மரா கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தினர். இதில், திருப்புலிவனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள திரளான கிராமத்தினர் கலந்துகொண்டனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
இவ்விழாவில், சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை, விழாக் குழுவினர், கிராமத்தினர் செய்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து, இரவு அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதியுலா வந்த திரிசூல காளியம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.