வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற ஆனி கருட சேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் கருட சேவை உற்சவங்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, வைகாசி பிரம்மோற்சவத்தின்போதும், ஆனி, ஆடி ஆகிய மாதங்களிலும் சேர்த்து மொத்தம் மூன்று கருட சேவை உற்சவங்கள் நடத்தப்படுகின்றன. இதில், வைகாசி பிரம்மோற்சவம் அண்மையில் நிறைவுற்றது.
இதையடுத்து, ஆனி கருட சேவை சனிக்கிழமை மாலையில் விமரிசையாக நடைபெற்றது. இந்த உற்சவத்தில், சிறப்பு அலங்காரத்துடன் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின்பு, சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள 4 மாட வீதிகளிலும் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கருட சேவையில், மேள தாளத்துடன், வேத பாராயணம், பஜனை ஆகியவற்றுடன் பவனி வந்த பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். இவ்விழாவில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.