சின்ன காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி, புதன்கிழமை சேஷ வாகனத்தில் பெருமாள் அருள்பாலித்தார்.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, ஹம்ச வாகன சேவையைத் தொடர்ந்து, மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை கருட சேவை நடைபெற்றது. காலை 4 மணி முதல் பெருமாள் வாகன மண்டபத்துக்கு வந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கருட வாகனத்தில் எழுந்தருளினார். இதையடுத்து, மாட வீதிகளில் புறப்பாடு சேவை நடைபெற்றது. பின்பு, மீண்டும் கோயிலை சென்றடைந்தார்.
இதைத்தொடர்ந்து, மாலை அனுமந்த வாகனத்தில் பெருமாள் வீதியுலா சேவை நடைபெற்றது. இதையடுத்து, புதன்கிழமை பெருமாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.