திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் பகவான் நூற்றாண்டு விழாவின் 17-ஆவது 2 நாள் ஆராதனை விழா புதன்கிழமை நிறைவு பெற்றது.
பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் நூற்றாண்டு விழா திருவண்ணாமலை - செங்கம் சாலையில் உள்ள ஆஸ்ரமத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. நூற்றாண்டு விழாவின் 17-ஆவது 2 நாள் ஆராதனை விழா செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது. அன்றைய தினம் காலை முதல் இரவு 8.15 மணி வரை பல்வேறு இசை, சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஆராதனை விழா நிறைவு: விழாவின் 2-ஆம் நாளான புதன்கிழமை காலை 7 மணிக்கு 35-க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டு சத ருத்ர பாராயணம், ருத்ர ஹோமம், ருத்ர யாகம், பூர்ணாஹுதி, பகவானின் 17-ஆவது ஆராதனை விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தினர்.
தொடர்ந்து, ஆஸ்ரம வளாகத்தில் உள்ள மூலவர் ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் லிங்க சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. காலை 10.30 முதல் 12.30 மணி வரை பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி, மாலை 4.30 முதல் 6 மணி வரை ஆர்.கணேஷ் குழுவினரின் நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி, மாலை 6.15 முதல் 8.15 மணி வரை வயலின் மேஸ்ட்ரோ கலைமாமணி ஆர்.குமரேஷ் குழுவினரின் வயலின் இசை நிகழ்ச்சி நடைபெற்றன.
இத்துடன் பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் நூற்றாண்டு விழாவின் 17-ஆவது 2 நாள் ஆராதனை விழா நிறைவு பெற்றது. நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை ஆஸ்ரமத் தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான டி.எஸ்.அருணாச்சலம், ஆஸ்ரம அறங்காவலர்கள் டி.எஸ்.ராமநாதன், மா தேவகி, மதர் விஜயலட்சுமி, சுவாமிநாதன், குமரன், ஆஸ்ரம தன்னார்வலர் ஆர்.எஸ்.இந்திரஜித் மற்றும் ஆஸ்ரம நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.