ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள் மெய்ஞானம் பெற்ற 51-ஆம் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றன. தொடர்ந்து மகா தீபாரானையும், திருப்படி விழாவும் நடைபெற்றன.
பின்னர், மலையடிவாரத்தில் பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமி, திருவலம் சாந்தா சுவாமி, ஓச்சேரி சித்தஞ்சி மோகனாநந்தா சுவாமி, வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தின் பீடாதிபதி முரளிதர சுவாமி ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இதில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி செ.ராஜேந்திரன், மகாத்மா காந்தி முதியோர் இல்லத்தின் தலைவர் ஜெ.லட்சுமணன், தொழிலதிபர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.