திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருத்தணி முருகன் கோயிலின் துணைக்கோயிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில், பங்குனி மாத பிரம்மோற்சவத்தையொட்டி திங்கள்கிழமை (மார்ச் 19) பந்தக்கால் நிகழ்ச்சியும், செவ்வாய்க்கிழமை மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலாவும் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து புதன்கிழமை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. தொடர்ந்து உற்சவர் சுவாமி திருக்கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏப்ரல் 9-ம் தேதி வரையில் நடைபெறும் விழாவில் தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் ஒவ்வொரு வாகனத்தில் உற்சவர் ஸ்ரீசோமாஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முக்கிய நிகழ்வான கமலத்தேர் உற்சவம் மார்ச் 27-ம் தேதியும், 28 -ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளன.
நிகழ்வில், கோயில் தக்கார் வே. ஜெயசங்கர், இணைஆணையர் சிவாஜி மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.