திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பங்குனித் திருவிழாவையொட்டி, வெண்ணெய்த்தாழி உத்ஸவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் 18 }நாள் பங்குனித் திருவிழாவும், அதைத் தொடர்ந்து 12 நாள் விடையாற்றி விழாவும் நடைபெறுவது வழக்கம்.
விழாவின் முக்கிய நிகழ்வாக 16 -ஆம் நாள் திருவிழாவான வெண்ணெய்த்தாழி உத்ஸவத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை காலை நவநீத சேவையில் தவழும் கண்ணன் திருக்கோலத்தில் ராஜகோபாலசுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து, கோயிலின் நான்கு வெளிப் பிராகாரங்களைச் சுற்றிய பின்னர் மேலராஜவீதி, பெரியக்கடைத் தெரு, பந்தலடி வழியாக வெண்ணெய்த்தாழி மண்டபம் வந்தடைந்தார் ராஜகோபாலசுவாமி.
அப்போது சாலையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஆன்மிக ஆர்வலர்கள், சுவாமி மீது வெண்ணெய்த் தெளித்து கோபாலா, கோபாலா என பக்தி கோஷங்களை எழுப்பி பெருமாளை வழிபட்டனர். பின்னர், சுவாமி வெண்ணெய்த்தாழி மண்டபத்தில் இருந்தபடி செட்டி அலங்காரத்தில் அருளினார்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் அலுவலர்கள், யாதவர் சமூகத்தினர் செய்திருந்தனர்.