காஞ்சிபுரம் ஏகாம்பநாதர் திருக்கோயிலில் நான்கு சுவையுடன் கூடிய அதிசய மாங்காய் காய்க்க தொடங்கியுள்ளது. இதைக் காண ஏராளமான பக்கதர்கள் கோயிலில் திரண்டுள்ளனர்.
சுமார் 3,500 ஆண்டுகளாகப் பட்டுப்போகாமல் அதிசய ஒற்றை மாமரம் இந்தக் கோயிலில் உள்ளது. அந்த மாமரத்திற்கு அப்படியென்ன சிறப்பு என்பதைப் பார்ப்போம்.
பழமையான இந்த திருந்தலத்தில் உள்ள மாமரத்தின் அடியில் தான் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் இருக்கிறார். அம்பாள் நாணத்துடன் தலை கவிழ்ந்தப்படி சிவனை நோக்கித் திரும்பியிருக்கிறாள். இதனை சிவனது திருமணக்கோலம் என்கிறார்கள். அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இம்மரத்தின் கீழ்தான் காட்சி தந்து மணம் முடித்தாராம்.
இப்படிப் பல அதிசயங்களைக் கொண்ட திருக்கோயில் காஞ்சிபுரத்தில், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரில் மக்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். இம்மரத்தின் பெயராலேயே சுவாமி ஏகாம்பரேஸ்வர் என அழைக்கப்படுகிறார். ஏகம்-ஒரு ஆம்ரம்-மரம் எனப் பொருள். இதனை வேத மாமரம் என்றும் அழைப்பர்.
இந்த ஒற்றை மாமரம் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முந்தையது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத்தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது. மக்கட்பேறு இல்லாதவர்கள் இம்மாமரத்தின் கனியை புசித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அப்படிப்பட்ட இந்த அதிசய மரத்தில் தற்போது மாங்காய் காய்க்க துவங்கியுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் பச்சைபசேலென துளிர்விட்டுக் காய்க்க துவங்கியுள்ளது. இந்த மாமரத்தின் கனிகளை வெளிநாட்டினர் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பார்த்து வியந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.