நவராத்திரி பிரம்மோற்சவத்தின்போது திருமலையில் வாடகை அறைகள் மூலம் தேவஸ்தானத்திற்கு ரூ.1.01 கோடி வருமானம் கிடைத்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: திருமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் திருமலையில் வாடகை அறைகளை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண பக்தர்கள் தங்குவதற்காக நான்கு மண்டபங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு பக்தர்கள் தங்கள் பொருள்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு லாக்கர்களையும் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது. சாஸ்திரங்களின்படி 2015ஆம் ஆண்டில் அதிக மாதங்கள் இடம்பெற்றதன் காரணமாக திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் மற்றும் நவராத்திரி பிரம்மோற்சவம் என இரு பிரம்மோற்சவங்கள் நடைபெற்றன. அதேபோல் நடப்பு ஆண்டும் அதிக மாதங்கள் இருப்பதால் கடந்த மாதம் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்றதோடு, தற்போது நவராத்திரி பிரம்மோற்சவமும் நடைபெறுகிறது. பிரம்மோற்சவ நாள்களில் வாடகை அறை முன்பதிவை தேவஸ்தானம் 50 சதவீதம் குறைத்தது. மேலும் பரிந்துரைக் கடிதங்களுக்கு வழங்கும் வாடகை அறை முறையையும் ரத்து செய்தது. அதனால் திருமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் வாடகை அறைகள் எவ்வித தடங்கல்களும் இல்லாமல் அளிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது வாடகை அறைகள் மூலம் தேவஸ்தானத்திற்கு ரூ.61.44 லட்சமும், இந்த ஆண்டு நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது ரூ.68.38 லட்சமும் வருவாய் கிடைத்தது. 2015ஆம் ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவத்தின் போது ரூ.71.16 லட்சமும், நடப்பு ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 6 நாள்களில் ரூ54.91 லட்சமும் வருவாய் கிடைத்துள்ளது. வாடகை அறை பிரிவு-2 மூலம் 2015ஆம் ஆண்டு ரூ.1.39 கோடியும், தற்போது 6 நாள்களில் ரூ.1.01 கோடியும் வருமானமாக கிடைத்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.