திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 7ஆம் நாள் காலையும், இரவும் சூரிய மற்றும் சந்திரப்பிரபை வாகனங்களில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார்.
ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நவராத்திரியின்போது பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த புதன்கிழமை இவ்விழா தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. அதன் 7ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை மலையப்ப சுவாமி மகாவிஷ்ணு அவதாரத்தில் ஒளி பொருந்திய சூரியப் பிரபை வாகனத்தில் அமர்ந்து காட்சியளித்தார்.
செந்திற மாலைகளை அணிந்து கொண்டு ஏழு குதிரைகள் பூட்டிய வண்டியை சூரியபகவான் இயக்க, மலையப்பர் மாடவீதியில் வலம் வந்தார். பின்னர் அவருக்கு பல்வேறு அபிஷேகப் பொருள்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது.
அதில் பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பழரசம், தேன் உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களை திருமலை ஜீயர்கள் எடுத்துத் தர, அர்ச்சகர்கள் உற்சவமூர்த்திகளுக்கு அபிஷேகத்தை நடத்தினர். அதன் பின் உற்சவமூர்த்திகளுக்கு நிவேதனம் சமர்பித்து அவர்களுக்கு அலங்காரம் நடைபெற்றது.
பின் மாலை, 5 மணிக்கு சகஸ்ரதீபாலங்கார மண்டபத்தில் 1008 விளக்குகளுக்கு இடையில் மலையப்பஸ்வாமி ஊஞ்சல் சேவை கண்டருளினார். அப்போது இசைக் கலைஞர்கள் பக்தி பாடல்கள், அன்னமாச்சாரிய கீர்த்தனைகள் உள்ளிட்டவற்றைப் பாடினர்.
அதன்பின் இரவு, 8 மணிக்கு சந்திரப் பிரபை வாகன சேவை தொடங்கியது. வெண்ணிற மலர் மாலை அணிந்து கொண்டு மலையப்ப சுவாமி குளிர்ந்த ஒளி பொருந்திய சந்திரப்பிரபை வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் காத்திருந்த பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பக்தர்கள் அவருக்கு கற்பூர ஆரத்தி அளித்து நிவேதனம் சமர்ப்பித்தனர். வாகன சேவைகளின் போது சூரியப்பிரபை மற்றும் சந்திரப்பிரபை வாகனத்தின் படம் அச்சிடப்பட்ட அஞ்சல் உறைகளை அதிகாரிகள் வெளியிட்டனர். வாகன சேவைக்கு முன்னால் நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களைப் பாடியபடி திருமலை ஜீயர் குழாம் செல்ல, வாகன சேவைக்குப் பின்னால் நாடெங்கிலுமிருந்து வந்த கலைக் குழுவினர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.