திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 8-ஆம் நாள்: தங்கத் தேரில் வலம் வந்த மலையப்பர்

திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 8-ஆம் நாள் காலை தங்கத் தேர் புறப்பாடு நடைபெற்றது. இதில் மலையப்ப ஸ்வாமி ஸ்ரீதேவி,
தங்கத் தேரில் பவனி வந்த மலையப்பர்.
தங்கத் தேரில் பவனி வந்த மலையப்பர்.


திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 8-ஆம் நாள் காலை தங்கத் தேர் புறப்பாடு நடைபெற்றது. இதில் மலையப்ப ஸ்வாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். 
திருமலையில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், நவராத்திரியின் போது பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த புதன்கிழமை முதல் நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது.
அதன் 8-ஆம் நாளான புதன்கிழமை காலை தங்கத்தேரில் தன் நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப ஸ்வாமி மாடவீதியில் பவனி வந்தார். தங்கத் தேரை பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து இழுத்தனர். தங்கத்தேர் என்பதால் பெண்கள் தேரை இழுத்து தொடங்கி வைத்தனர். பின்னர், மலையப்ப ஸ்வாமிக்கு பல்வேறு அபிஷேகப் பொருள்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. 
அதில், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பழரசம், தேன் உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களை திருமலை ஜீயர்கள் தங்கள் கைகளால் எடுத்துத்தர, அர்ச்சகர்கள் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகத்தை நடத்தினர். அபிஷேகம் முடிந்த பின் உற்சவ மூர்த்திகளுக்கு நிவேதனம் சமர்ப்பித்து, அவர்களுக்கு அலங்காரம் நடைபெற்றது. பின்னர், மாலை 5 மணிக்கு சகஸ்ரதீபாலங்கார மண்டபத்தில் 1,008 விளக்குகளுக்கு இடையில் மலையப்ப ஸ்வாமி ஊஞ்சல் சேவை கண்டருளினார். ஊஞ்சல் சேவையின்போது, இசைக் கலைஞர்கள் பக்தி பாடல்கள், அன்னமாச்சாரியார் கீர்த்தனைகள் உள்ளிட்டவற்றை இசைத்தனர். 
இரவு 8 மணிக்கு கல்கி அவதாரத்தில் குதிரை வாகனத்தில் மலையப்ப ஸ்வாமி வலம் வந்தார். பிரம்மோற்சவத்தின் இறுதி வாகன சேவை என்பதால் திரளான பக்தர்கள் கூடி, அவருக்கு கற்பூர ஆரத்தி அளித்து நிவேதனம் சமர்ப்பித்தனர். வாகன சேவைகளின்போது, தங்கத் தேர் மற்றும் குதிரை வாகன புகைப்படம் கொண்ட அஞ்சல் உறைகளை அதிகாரிகள் வெளியிட்டனர். 
வாகன சேவைக்கு முன், நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களை பாடியபடி, திருமலை ஜீயர் குழாம் செல்ல, வாகன சேவைக்குப் பின் நாடெங்கிலுமிருந்து வந்த கலைக் குழுவினர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். 
வியாழக்கிழமை (அக்டோபர் 18) தீர்த்தவாரியுடன் திருமலையில் நடைபெற்று வந்த நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com