கோட்டயத்தில் 'பின் நிலாவு' என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பிற்காக வந்திருந்தார் ஸ்ரீவித்யா. அவர் மலையாளத்திலேயே அதிக கவனம் செலுத்தப்போக, தமிழ்ப்படங்களில் மட்டுமிருந்து அல்ல. பத்திரிக்கைகளிடமிருந்தும் கூட அவருக்கு விடுதலைதான்.
அவரிடம் பேசியதிலிருந்து..
எப்படி சினிமாவுக்கு வந்தீங்க?
கொஞ்சம் நினைவுகளுடன் பின்னோக்கி போனார் ஸ்ரீவித்யா. எனக்கு அம்மா எம்.எல்.வசந்தகுமாரின்னு எல்லாருக்கும் தெரியும். அப்பாவும் ஒரு நடிகர். ஆரம்பத்தில் எனக்கு நடிப்பு பத்தி ஒன்னும் தெரியாது. ஆனா சின்ன வயசுலயே நடிக்க வந்துட்டேன்.
ஆறு வயசா இருந்தப்ப என்னை சிறந்த பாடகியா நடிகையா உருவாக்க அம்மா ஆசைப்பட்டாங்க. அதுக்காக என்னை பத்மினியோட அனுப்பிச்சாங்க.
அந்த சமயத்தில ஏ.பி.நாகராஜன் சார் என்னை பாத்தாரு. படத்தில் நடிக்கிறியான்னு கேட்டார். எனக்கு பயமாயும் தயக்கமாவும் இருந்துச்சு. முடியாதுன்னு சொல்லிட்டு ஸ்கூலுக்கு போயிட்டேன்.
திரும்பறப்ப பாத்தா எனக்காக ஒரு கார் காத்துகிட்டு நிக்குது. அதில் போனேன். நடிக்கச் சொன்னாங்க. நடிச்சேன்.
என்னோட முதல் படம் திருவருட்ச்செல்வர்தான். அப்புறம் மூன்றெழுத்து, நீலகிரி எக்ஸ்பிரஸ் எல்லாத்திலயும் நடிச்சேன். பெரிய பொண்ணா ஆனதும் பாலசந்தர் சார் நூற்றுக்கு நூறு படத்தில நடிக்க வச்சார். மலையாளத்துலதான் நிறைய நடிச்சிருக்கேன்.
கணவரைப்பத்தி குடும்ப வாழ்க்கையை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.
சொல்ல என்ன இருக்கு. ஜார்தான் என் கணவர்ங்கிறது எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே? எங்களோடது காதல் கல்யாணம். வழக்கம் போல பெரியவங்ககிட்ட இருந்து எதிர்ப்பு. சாதியையும் மத்ததையும் காட்டி வெட்டி விட பாத்தாங்க.நாங்க ஒத்துக்கலை தனியா வந்து கல்யாணம் செஞ்சுக்கிட்டோம்.
கணவர் நடிக்கிறதுக்கு எதிர்ப்பு..கேள்வியை முடிப்பதற்குள் பதிலை ஆரம்பித்தார் வித்யா. தெரிவிக்கல..நல்லா நடிக்க வருது. பணமும் வருது. அகலமா கால் வைக்காம மலையாளத்துல மட்டும் நடி போதும்னார். அப்படியே நடித்து வரேன்.
தமிழ்ப்படங்கள்மேல அப்படி என்ன வருத்தம் கோபம்?
சேச்சே..அப்படி எதுவும் இல்ல. மலையாளப்படங்கள் திட்டம் போட்டு எடுக்குறாங்க. கால்ஷீட்டை வாங்கிட்டு வீணாக்கிறதில்ல. எனக்கு உள்ள மரியாதை தர்றாங்க. நான் எதிர்பார்க்கிற பணத்தை தர்றாங்க. எல்லாத்துக்கும் மேல திருப்தியான ரோலா கிடைக்குது.
அவார்டு எதுவும் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் உண்டா?
நிச்சயமா இல்லை..எதுக்கு அவார்டெல்லாம்?. என் திருப்திப்படி நடிக்கிறேன்.பாராட்றாங்க.அதுவே போதும்.
(சினிமா எக்ஸ்பிரஸ்01.06.83 இதழ்)