1962 இல் 'தேன் நிலவு' படத்துக்காக வாகினி ஸ்டூடியோவில் இடைவிடாத படப்பிடிப்பு. அப்போது பாலாஜி நாடகம் போட்டு நடித்துக் கொண்டிருந்த சமயம். 'என்னிடம் ஒரு அருமையான கலைஞன் இருக்கிறான்; ஆனால் நல்ல வாய்ப்பு இல்லை.ஒல்லியான உடம்புதான்.நன்றாக நடிப்பான்; அவனை உபயோகிப்படுத்திக் கொள்ளுங்கள்' என்று சிபாரிசு செய்தார்.
' நெஞ்சில் ஒரு ஆலயம்' படம் இயக்க ஆரம்பித்தேன். அதில் ஒரு வார்ட்பாய் வேடத்திற்கு பாலாஜி சொன்ன நபரை போடலாமா என்று தீர்மானித்து வரச் சொன்னேன். வந்தவர் அந்த பாத்திரத்திற்கு நூற்றுக்கு நூறு பொருத்தமாக இருந்தார். ஒல்லியான உடம்பு.துறுதுறுவென்று சுறுசுறுப்பாக நடித்தார். காமெடி என்ற பெயரில் அவர் என் முன்னாடி நடித்தது எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவர் நடிப்பு என்னைக் கவர்ந்தது. அவர்தான் நாகேஷ். ஆரம்பத்தில் தாய் நாகேஷ் என்றுதான் அழைக்கப்படுவார். முதல் படத்துக்காக சின்ன தொகை பேசினோம்.
தொகையை விட தனக்கு என்ன உடை கொடுப்பார்கள் என்றே எல்லாரையும் கேட்பார். அவருக்கு மட்டும் மேக்கப் டெஸ்ட்டே நாங்கள் போடவில்லை. தனக்கு ஏற்ற உடைக்காக அளவு எடுக்கும்படி அவர் கூற, கோபு (எங்கள் யூனிட்) 'அது தேவையில்லை; எங்கள் யூனிட்டில் உடைகள் சப்ளை செய்யும் காஜா இருக்கிறார். அவர் உடையே உனக்கும் பொருந்தும்' என்றவுடன் நாகேஷ் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டும்.
'நெஞ்சில் ஒரு ஆலயம்' படத்தில் ஒரு காட்சி. டாக்டருக்கு பயந்து நாகேஷ் கீழே குதித்து தான் உண்மையான வேலையாள் என்பதை காட்ட வேண்டும். உயரத்தில் இருந்து குத்திக்கும் காட்சியை மாற்றலாமா என்று நாங்கள் யோசிப்பதற்கு முன்னரே, நாகேஷ் தான் குதிப்பதாக கூறி அவ்வாறே செய்தார். நடிப்பு என்று வந்து விட்டால், காட்சிக்கு தேவை என்றால் எது வேண்டுமானாலும் நாகேஷ் செய்வார் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
பேட்டி: சிக்கி
படம்: உத்ரா
(சினிமா எக்ஸ்பிரஸ் 15.05.84 இதழ்)