தாலாட்டுக் கேட்ட கடலும்
குழந்தையாய்த் தூங்கும்
தாலாட்டு
"நா" படைக்கின்ற கிராமம்
தலாட்டுப் பாடும் போது
விழித்துக் கொள்கிறது
தமிழ்
தாலாட்டுக் கேட்ட குழந்தைதான்
காலையில் கண் விழிக்கிறது
பூவாய்
தலாட்டுப் பாடல் அல்ல
அன்னை பிள்ளைக்கு ஊட்டுகின்ற
தமிழ்ப் பால்
இன்று
நவீன காற்றில்
அணைந்து போனது தாலாட்டு விளக்கு
சீடிக்களில்
உறங்குகின்றன குழந்தைகள்
புதுமைப் பெண் நா கொடியில் காய்க்கிறது
அழுகைப் பிஞ்சு
தாலாட்டு விதை புதைத்து
முட் செடி உண்டாக்கி விட்டார்கள்
பாட்டியும் அம்மாவும் ஆடிய நா ஊஞ்சலில்
குழந்தை உறங்கியது
இப்போது
அன்னை தூங்க
பிள்ளை பாடுகிறது தாலாட்டு
தலாட்டுப் பால் கொடுக்க மறுக்கிறது
இளம் அன்னை
நா முலை
உறங்கிப் போன தாலாட்டுக் குழந்தைக்கு
விழிப் பூட்டுவோம்
வாருங்கள்