இன்றைய தாலாட்டு: கவிஞர் கே. அசோகன்

அலைபேசியை அழுத்தி விட்டால்
ஆராரோ என்றேதான் இசைக்க
நிலையில்லா கடிகார பெண்டுலமாய்
நீட்டிமுழக்கி தூளியும் ஆடிடவே

கலையான பிள்ளைகள் தான்
கவலையின்றி தூங்கிட தாலாட்டு!
அலைபேசியே அம்மாவாய் மாற
அமைதியாய் உறங்குதே குழந்தைகள்!

தொலைக்காட்சி கண்கவர் விளம்பரமே
தூங்காத பிள்ளைக்கு தாலாட்டு!
அலையடிக்கும் கடலதை காணலாம்
ஆடிவரும் தேரையும் பார்க்கலாம் 
தொலைக்காட்சி பாடல்களில் ரசித்தே

தூளியில் குழந்தைகள் தூங்குதே
தொலைகாட்சியும், அலை பேசியும்
தாலாட்டு பாடியே மகிழ்விக்குதே!

கிணுகிணுக்கும் அலைபேசி ஒலியை
கருவறையில் கிடக்கும் போதே
அணுதினமும் கேட்டே இருந்தால்
அக்குழந்தை பிறந்து வெளிவந்தால்
கிணுகிணு கிலுகிலுப்பையா கேட்கும்

கண்பறிக்கும் அலைபேசிதானே கேட்கும்
கிணுகிணுக்கும் அலைபேசி சத்தம்தானே
குழந்தைகளுக்கு இன்றைய தாலாட்டாம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com