எல்லா மலர்களையும் போலவே
என்னையும் படைத்தான் இறைவன்
காற்றடித்தபோதே
காணாமல் போயின சில
காதலியின் தலையில்சூட
காதலனின் கைகளுக்குச்
சென்றன சில
சந்தைக்குச் சென்று
விற்பனைக்குப் போயின பல
பூக்கடைக்குப் போன பின்னர்
மாலையாயின சில
பூச்சரமாகி இல்லறம்
சென்றன சில
கடவுளின் திருமேனியைத்
தழுவி அவன்
கழுத்திலும்
மார்பிலும் கம்பீரமாயின சில
மணமேடைக்குச் சென்று
மஙகலப் பொருளானவை சில
மணம்வீசும்
மங்கையரின் கூந்தலில் சில
ஏனோ நான்மட்டும்
கல்லறையின் மேலே
கவனிப்பாரற்று .
உள்ளே உறங்குபவரை
நினைவில் கொள்ளவரும்போது
என்னையும் ஏனோ
கொண்டுவந்து
போட்டுவிட்டுப்போகின்றனர்
வெயிலில் காய்ந்து
வாடி வதங்கி
வடிவிழந்து
சிலநேரம்
ஆடுமாடுகளின் அரும்உணவாகி
ஏதோ ஒருநாள்
யாரோ ஒருவரால்
தள்ளப்பட்டு
வீணாகிப்போகிறேனே
இது என்ன நியாயம்
இறைவன் படைப்பில்
இதுதான்
நியாயமோ?