அன்னை விலங்கை அறுப்பான் வேண்டித்
தன்னை விலங்கொடு தளைத்த மறக்குல
மங்கையர் யாவர்க்கும் வீர வணக்கம்
விடுதலை கெட்டுக் கெடுதலை ஓங்கிய
அடிமை நாட்டின் அல்லலை நீக்க
வெள்ளையார்க் கெதிராய் வீறுகொண்டு எழுந்து
வாளேந்திப் போர்புரிந்த வனிதையர் திலகங்கள்
தாள்பணிந்து போற்றுவோம் வீர வணக்கம்
உடலால் உளத்தால் உரையால் உணர்வால்
அடலேறாய் நின்று விடுதலை வேள்வியில்
உடல்பொருள் ஆவியை ஆகுதி யாக்கிய
படைமடம் படாத பாவையர் யாவர்க்கும்
தினம்தினம் செலுத்துவோம் வீர வணக்கம்