நீரோட்டம் இல்லையென்றால் ஆறோட்டம் ஏது ?
நீரில்லா ஆற்றில் மணல் நிரம்பி இருக்க ..இன்று
மணல் அள்ள ஓடும் வண்டிகள் ஓட்டம் எந்த
ஒரு ஆற்றின் நீர் ஓட்டத்தையும் தள்ளும் பின்னுக்கு !
நீரோடும் ஆறே ஒரு பாலைவனம் ஆகும் நேரம்
சோலைவனம் எங்கே இருக்கும் நாட்டுக்குள் ?
இன்று நிழல் தேடி ஓடும் நாம் குடி நீர் தேடி
அலையவும் வேண்டுமா ? சிந்திக்க வேண்டும் நாம் !
இணைய தளம் மூலம் உலகத்தின் ஒரு ஒரு
மூலையையும் இணைத்து விட்டோம் !
இணைய தளம் மூலம் இதயங்கள் பல
இணையவும் வழி காட்டி விட்டோம் !
கணினி அறிவியல் கையில் எடுத்து
விண்வெளியிலும் நம் வெற்றிக் கணக்கை
துவக்கி விட்டோம் ! நதி நீர்
இணைப்பை மட்டும் நமக்கு எட்டாக் கனி
என்று விட்டு விடுவது என்ன நியாயம் ?
மண்ணையும் விண்ணையும் இணைத்த
நாம் நம் நாட்டு நதி நீரை இணைக்க
முடியாதா என்ன ? "உன்னால் முடியும் தம்பி "
என்ற சொல்லின் பின்னால் இருக்கும்
நம்பிக்கை ஒரு வேத வாக்கு அல்லவா !
வெற்று வாக்கு இல்லையே அந்த மந்திர வாக்கு !
மாய மந்திரம் எதுவும் செய்ய வேண்டாம் நாம் ! ஒரு வழி
வகுப்போம் நதி நீர் இணைப்புக்கு இன்றே
இப்பொழுதே ! இமயம் முதல் குமரி வரை
சாலைகளை இணைத்த நமக்கு சாலையோரம்
சீறிப்பாயும் நதிகளையும் இணைப்பது ஏன்
முடியாத இலக்கு இன்று வரை ?
சற்றே சிந்தித்து எதிர்கொள்ள வேண்டும்
இந்த சவாலையும் ! முயன்றால் முடியாதது
என்று ஒன்று உண்டா ?
இணைவோம் நாம் ஒன்றாக ...இணைப்போம்
நம் நதி யாவும் !
இணையப்போவது நதிகள் மட்டும் அல்ல !
இந்திய மக்களின் தேசிய ஒருமைப்பாட்டின்
நீரோட்டமும் சேர்ந்துதான்!
வற்றாமல் தொடரட்டும் நீரோட்டம் ஒவ்வொரு
ஆற்றிலும் !
இது ஜீவ நதி அது ஜீவ நதி என்னும்
பேதம் இல்லாமல் நீரோடும் ஒரு ஒரு ஆறும்
ஒரு ஜீவ நதியாக மாறட்டும் !
ஆறு செல்லும்
வழி எல்லாம் பூமி செழிக்கட்டும் ! நதி இணைப்பு
நம் நாட்டு மக்கள் அனைவரையும் ஓர் அணியில்
இணைக்கும் அன்பு பாலமாகவும் அமையட்டும் !