சீரோடும் சிறப்போடும் சிறந்த வாழ்க்கை
சிதறித்தான் போகிறதே சீர்கெட் டுத்தான்.
நீரோடும் நெல்லோடும் நிறைந்த பூமி
நீரின்றி வறண்டுத்தான் நெஞ்சம் வாடி
தேரோடும் தெருவினிலே தெம்மாங் கில்லை.
தெய்வீகப் பாடலுந்தான் தேனாய் இல்லை.
ஊரோடும் உறவோடும் ஒன்றாய்ப் பேச
உன்னதமாய் விழாக்களுமே ஒன்றும் இல்லை.
வயலெல்லாம் வற்றிப்போய் வளமை இல்லை.
வரப்பினிலே புற்களுமே வளர வில்லை.
உயர்வான எண்ணங்கள் உடைந்து போக
உணவுக்குக் கையேந்தி உழவன் வாட
துயரங்கள் தீர்ந்துவிட துளிகள் வீழ
தொடர்மழைதான் பெய்யட்டும் துன்பம் போக்க
இயல்பான விவசாயம் என்றும் வேண்டும்
இனிதாகப் போற்றிடுவோம் இயற்கை யையே.!