மன்னுபுகழ்க் காவிரி யாலெங்கள் நிலமொடு நன்செய் பயிர்களும் தழைத்ததொரு காலமாம்..!தன்னிஷ்டம்போல் தமிழமெங்கும் ஓடிய அது தண்ணீரின்றி வற்றியே தரையிலின்று குறுகியது..!அன்றாடம் அலைததும்பும் அகண்ட காவிரிதான் இன்றும் வறண்ட காவிரியெனக் காட்சிதருகிறது..!என்னவென இன்றதன் நிலையைச் சொல்வேன் என் நினைவலையில் நதிக்கரையே நிழலாடுது..!என்னை மறப்பேன்! நதியில் அமிழும்போது எழுப்புமே கூழாங்கற்களென் நகவிரலை நெருடி..!கன்னல் தமிழில் பாடிக்கொண்டே நீந்தும்போது கெண்டைமீனுமென் காலினழுக்கை நக்கி நீக்கும்..!பொன்னிற மாலையில் நதிக்கரை மணலிலென் பொங்கும் நினைவைக் கவிதை யாக்கினேனின்று..!என்னதான் நாமும் அறிவியலால் வளர்ந்தாலும் இயங்குமுயிர்க்கு நீர்தேவை! அது நதியிலில்லை..!மன்னாவுலகில் மற்றவர் மெச்சிய பாரதத்தில் இன்னமும் வற்றாதஜீவ நதிகளுண்டு நீர்அறிவீர்.!தென்னரங்கம் சூழவரும் காவிரிக் குழந்தையை திவ்யநதி கங்கைத் தாயுடனிணைத்து வைப்பீர்.!தன்னிடம் தேவைக்கதிக மிருப்பதை..தானமாகத் தந்தருளும் மனநிலையை நதிமூலம் எழவைப்பீர்.!அன்னமும் நீரும் இல்லையெனில் அதற்கொரு அர்த்தம் இராதெனும் உண்மையை நீரேற்பீரே.!