நவரச அணிவகுப்பில்
நயனங்களின் ஆர்பரிப்பு
அமைதி ஒரு புறம்
ஆச்சர்யம் மறுபுறம்
சினம் ஒரு புறம்
சிரிப்பு மறுபுறம்
வெறுப்பும் அருவருப்பும்
வீரமும் கருணையும்
ஆனந்தமுடனே கண்களில்
அளவற்று பொலிவேற்றும்
அற்புத மனவோட்டம்,
மனைவியின் பார்வையில்
நவரசமும் நர்த்தனமாடும்,
அமைதியான பார்வையின்
அர்த்தம் - அவர் வீட்டார் வரவு,
ஆச்சர்யம் என்றாலோ - அது
நாம் பெற்ற- சாதனையால்,
கண்கள் புரியும் சமரில்
இவ்விதம் ததும்பி வழியும்
காதல்,
அவளிடம் உன் முகம்
மலர் என்றேன்,
போட்டிக்கு
பட்டாம்பூச்சியாய்
அவளிரு கண்கள் படபடக்க,
என் இதய மலருக்குள்
மகரந்தச் சேர்க்கை நிகழ
ஒரு மெளன யுத்தம் நிகழ்ந்தது
நான்கு கண்களுக்கு நடுவே,
ஜெயிப்பது யார்?
இச் சமரில் தோற்றவரே
வெற்றியாளர் என்று மனதைத் தேற்றி
விட்டுக் கொடுப்போம் எந்நாளுமே.