பாடல் - 7
மல்குநீர்க் கண்ணொடு மையல்உற்ற
மனத்தினளாய்
அல்லும் நல்பகலும் நெடுமால் என்று அழைத்து
இனிப் போய்ச்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகும்கொல் ஒசிந்தே.
என்னுடைய மகள், கண்களில் நீர் மல்க, மயக்கம் கொண்ட மனத்தோடு வாடுகிறாள், இரவிலும் நல்ல பகலிலும் ‘நெடுமால்’ என்றே அழைக்கிறாள், இனி அவள், எம்பெருமான் செல்வம் மல்கிக் கிடந்த திருக்கோலத்தில் அருள்செய்கின்ற திருக்கோளூரை நோக்கி வருந்தித் தளர்ந்து நடப்பாளோ, அந்த
ஊரினுள் அவள் எப்படிப் புகுவாளோ!
***
பாடல் - 8
ஒசிந்த நுண்இடைமேல் கையை வைத்து
நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ணநீர் துளும்பச்
செல்லும்கொல்,
ஒசிந்த ஒண்மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே.
இன்பத்தாலே துவண்டவள், ஒளிநிறைந்த மலர்மேல் வீற்றிருப்பவள், அந்தத் திருமகளின் கணவன் எம்பெருமான், அவன் எழுந்தருளியிருக்கும் திருக்கோளூரை எண்ணி நெஞ்சம் கசிந்த எங்கள் மகள், எங்களை விட்டுச் சென்றுவிட்டாள், அவ்வூரை நோக்கி நடக்கையில் நுட்பமான இடை வருந்த, அதன்மேல் கையை வைத்து அவள் நோவாளோ, நெஞ்சம் கசிய, கண்களில் நீர் தளும்ப வருந்தி நடப்பாளோ!