பாடல் - 11
கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள்
படைத்து, அளித்துக் கெடுக்கும் அப்
புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன்
சடகோபன் சொல் ஆயிரத்துள் இப்பத்தும்
கண்டு பாடவல்லார் வினைபோம் கங்குலும் பகலே.
மூவகைக் குணங்களைக் கொண்ட மும்மூர்த்திகளாகவும் எம்பெருமானே திகழ்கிறான், அவனே இவ்வுலகைப் படைக்கிறான், அழிக்கிறான், காக்கிறான், திருவுந்தியிலே தாமரையைக் கொண்டவன், பாற்கடலிலே பள்ளிகொள்கிறவன், நம் அப்பன், அப்பெருமானுடைய தொண்டர்களுடைய தொண்டர்களுடைய தொண்டர்களுடைய தொண்டன் சடகோபன் சொன்ன ஆயிரம் திருப்பாடல்களிலே இந்தப் பத்தையும் பாடவல்லவர்களை இரவு, பகல் எக்காலத்திலும் வினைகள் நெருங்காது, நீங்கிப்போகும்.