பாடல் - 9
விரும்பிப் பகவரைக் காணில் வியல்இடம் உண்டானே
என்னும்,
கரும்பெரு மேகங்கள் காணில் கண்ணன் என்று ஏறப்
பறக்கும்,
பெரும்புலம் ஆநிரை காணில் பிரான் உளன் என்று பின்
செல்லும்,
அரும்பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி
அயர்ப்பிக்கின்றானே.
(தாய் சொல்கிறார்)
விரும்பி இறைவனுக்கு அடிமையானவர்களைக் கண்டால், ‘விரிந்து பரந்த உலகங்களையெல்லாம் உண்ட திருமால்’ என்கிறாள் என் மகள், கரிய, பெரிய மேகங்களைக் கண்டால், ‘கண்ணன்’ என்று எழுந்து பறந்து அவற்றைத் தழுவத்துடிக்கிறாள், பெரிய, அழகிய பசுக்கூட்டங்களைக் கண்டால், ‘அவற்றினிடையே கண்ணன் இருக்கிறான்’ என்று அவற்றின் பின்னே செல்கிறாள், பெறுவதற்கு அரிய என் பெண்ணை மாயோன் இப்படி அலறச்செய்து மயங்கவைக்கிறானே.
******
பாடல் - 10
அயர்க்கும், சுற்றும் பற்றி நோக்கும், அகலவே நீள்நோக்குக்
கொள்ளும்,
வியர்க்கும், மழைக்கண் துளும்ப வெவ்உயிர் கொள்ளும்,
மெய் சோரும்,
பெயர்த்தும் கண்ணா என்று பேசும், பெருமானே வா என்று
கூவும்,
மயல் பெரும் காதல் என் பேதைக்கு என்செய்கேன்
வல்வினையேனே.
(தாய் சொல்கிறார்)
என் மகள் மயங்குகிறாள், கண்ணன் வந்துவிட்டானா என்று சுற்றிலும் பலமுறை பார்க்கிறாள், அவனைக் காணவில்லையே என்று கண்களை விரித்து நெடுந்தூரம் பார்க்கிறாள், வியர்க்கிறாள், குளிர்ந்த கண்களில் நீர் ததும்பும்படி பெருமூச்சு விடுகிறாள், தளர்கிறாள், மீண்டும் ‘கண்ணா’ என்று பேசுகிறாள், ‘பெருமானே வா’ என்று கூவுகிறாள், இப்படிப் பெரிய காதல் மயக்கத்தைக் கொண்டிருக்கும் என் பெண்ணுக்கு நான் என்ன செய்வேன்? இவளை இவ்வாறு காண்பதற்கு நான் என்ன பாவம் செய்துவிட்டேனோ!