கேடுஇல் விழுப்புகழ்க் கேசவனை, குருகூர்ச்
சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும்
பயிற்றவல்லார்க்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன்காண
நலன்இடை ஊர்திபண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூ உலகுக்கும்
தரும் ஒரு நாயகமே.
அழிவில்லாத சிறந்த புகழையுடையவன் கேசவன், எம்பெருமான், அந்தப் பெருமானைப் பற்றிக் குருகூர்ச் சடகோபன் ஆயிரம் பாடல்களைப் பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் பாடவல்லவர்களுக்கு அவன் பல நன்மைகளைத் தருவான், நாடும் நகரமும் அவர்களை நன்றாகக் காணும்படி செய்வான், அவர்கள் எப்போதும் நல்ல விஷயங்களுக்கு மத்தியில் இருக்கும்படி செய்வான், பரமபதத்தை அருள்வான், தன்னுடைய மூன்று உலகங்களையும் ஆளும்படி செய்வான்.